பறக்கும் பறவையொன்று
பறந்து கொண்டிருக்கிறது.
உலர்ந்த மணலில்
உறைந்து கிடந்தவிதை மீது
விழுந்தது மழைத்துளி.
மஞ்சள் வெயிலில் மயங்கி
கிடந்த சாரைப் பாம்பொன்று
ஊர்ந்து செல்கிறது.
உதிரும் சருகில்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சிலந்திப் பூச்சி.
தகிக்கும் தார்ச்சாலையில்
பதியாத சுவடுகள்
இழுவை மாடு.
புற்களை வெட்டாதீர்கள்
உறங்கிக் கொண்டிருக்கிறது
பனி துளிகள்.
பூக்கள் மலர்கின்றன
வண்ணத்துப் பூச்சிகளை
பிடிக்காதீர்கள்.
கொசு கடித்தபோது
அயர்ந்து உறங்குகிறான்
பிச்சைக்காரன்.
இரவுநேர மழை
வடியும் நீரிடுக்குகளிடையே
கத்துகிற தவளைகள்.
தீட்டப்பட்ட ஓவியம்
உயிர்த்து எழுகிறது
பார்வை விழிகள்.
இரவின் மௌனம்
பகலின் இரைச்சல்
உதிரக் காத்திருக்கும் மலர்.
பூக்களின் தரிசனம்
கண்டு ரசித்தேன்
மலரும் பொக்கைவாய்.
அமாவாசை இரவில்
தொலைந்த நிலா
புழக்கடையில் அக்கா.
ஆழிப் பேரலை
அள்ளிச் சென்றது
சாதி முட்களை.
விழிகளால் பேசி
இதழ்களால் எழுதினான்
ஈர முத்தம்.
முகிழ் விழுது
மழை விழுது
ஆடி பழகு.
வெள்ள அபாயம்
காலியான ஊர்
கதறும் தவளைகள்.
பற்றி எரிகிறது
புதர்க் காடெங்கும்
மோக தீ.
மௌன இரவின்
நிசப்த ஒலிகள்
நீயும் நானும்.
பழைய செருப்பை
உதறி நடந்தான்
கடிக்கும் புது செருப்பு.
காற்றிலாடும்
ஒற்றை இறகு
வானம் வசப்படுமா?
பூக்களோடு
என்ன உரையாடல்?
ரீங்காரமிடும் வண்டுகள்.
கிளையில்லா மரம்
கண்களை உறுத்துகிறது
கூடில்லாப் பறவை.
ருசியில்லை
தூர எரிந்தபோது
பசித்தது வயிறு.
மதுரசத்தில் திளைத்தபோது
இறந்து கிடந்தவன் மீது
மொய்க்கும் வண்டுகள்.
முதல்தட்டில் பொருண்மை
கடைத்தட்டில் பொறுமை
இடைத்தட்டில் வெறுமை.
சலிப்புடன் அமர்ந்திருக்கிறான்
குழந்தை அழுகிறது
சோறூட்டுகிறாள் தாய்
பட்டாம்பூச்சி படபடக்கிறது.
எது ஹைக்கூ?சலிப்புடன் அமர்ந்திருக்கிறான்
கோழி கூவுகிறது.
காகங்கள் கரைகின்றன
காகங்கள் கரைகின்றன
சோற்றுப் பருக்கைகளைச் சுமந்தபடி
ஊரும் எறும்புகள்..
ஆந்தைகளின் அலறல்
நிசப்தங்களில் கசிந்திடும்
ஒற்றை விளக்கொளி..
பூச்சிகளின் பேரிரைச்சல்
மௌனம் கலைக்கும்
பூக்களின் தரிசனம்.
தொலைந்த வாழ்க்கை
சிதறிய சில்லறைகளை
பொறுக்கும் பிச்சைக்காரன்.
பறவைகளின் பரபரப்பு
இலையுதிர்த்த மரங்களில்
துளிர்விடும் இலைகள்.