இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011
இன்று சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முன்னின்று நடாத்திய "சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு -2011" கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக ஆரம்பமாயிற்று. இம்மாநாட்டுக்காக இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், ஃபிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மன், அவுஸ்திரேலியா முதலான பல நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள், கல்விமான்கள் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.
புலம்பெயர் எழுத்தாளரான லெ. முருகபூபதி (அவுஸ்திரேலியா) அமைப்பாளராக இருந்து ஒழுங்குசெய்த இம்மாநாடு இலங்கை ராஜபக்ஷே அரசின் அனுசரணையுடன் நடைபெறும் கண்துடைப்பு நாடகமே என்ற வதந்தி பரவியதையடுத்து பல்வேறு ஐயங்களும் சர்ச்சைகளும் கிளப்பப்பட்டு வந்தமை நாமறிந்ததே. இதனையடுத்து, உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் சிலர் இம்மாநாட்டைத் தாம் புறக்கணிப்பதாக அறிக்கை விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பேராளர்களுக்கான வரவேற்பு ஊர்வலத்தையடுத்து யுத்தத்தினாலும் சுனாமியாலும் உயிரிழந்தவர்களுக்கான ஒருநிமிட மௌன அஞ்சலியோடு தொடக்கவிழா நிகழ்வுகள் ஆரம்பமாயின. மங்கல விளக்கேற்றம், தமிழ்த்தாய் வாழ்த்து, மாநாட்டு கீதம், வரவேற்பு நடனம் முதலான சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து வரவேற்புரை மாநாட்டின் இலங்கை இணைப்பாளரான டாக்டர் தி. ஞானசேகரத்தால் நிகழ்த்தப்பட்டது. லெ. முருகபூபதியின் தொடக்கவுரையை அடுத்து தலைமையுரையை பேராசிரியர் சபா. ஜெயராசா நிகழ்த்தினார். பேராசிரியர் கா. சிவத்தம்பி வாழ்த்துரை வழங்க, மாநாட்டு மலர் அறிமுக உரையினை டாக்டர் ஜின்னாஹ் ஷரிஃபுத்தீன் நிகழ்த்தினார். மலர் வெளியீட்டுரை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. மாநாட்டு மலரின் முதற்பிரதியைத் தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகளின் சிறப்புரைகள் இடம்பெற்றன.
இலங்கை சார்பாக மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக் ஜீவாவும் இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சார்பாக வதிலை பிரபாவும் சிறப்புரையாற்றினார்கள். யாத்ரா ஆசிரியர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கினார். 'தமிழ்த்தூது' தனிநாயகம் அடிகளார் அரங்கில் இடம்பெற்ற தொடக்கவிழா நிகழ்வுகள் மதியம் இரண்டு மணியளவில் இனிதே நிறைவுற்றன.
மீண்டும் மாலை ஐந்து மணிக்கு 'எஸ்.டி. சிவநாயகம் அரங்கு' சங்கரப்பிள்ளை மண்டபத்தில் "கணினியும் வலைப்பதிவுகளும்" என்ற தலைப்பில் ஆரம்பமாயிற்று. இந்த அரங்கு இணைப்பேராசிரியை மு.சு. தங்கம் (இந்தியா), டாக்டர் எம்.கே. முருகானந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது. இந்த ஆய்வரங்கின் மதிப்பீட்டாளர்களாக ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் பாரதி இராஜநாயகம், சி. சிறீசுக்கந்தராசா (கனடா) ஆகியோரும், இணைப்பாளராக மேமன்கவியும் பணியாற்றினர். இவ்வரங்கில் இடம்பெற்ற ஆய்வுரைகள் பற்றிய விபரம் வருமாறு:
1. கணினியில் தமிழ் - கே.சர்வேஸ்வரன் (கணினிப் பொறியியலாளர்)
2. தமிழ் அச்சு வரிவடிவத்துக்கான OCR முயற்சிகள் -செல்வி சபீனா தயானி தயானந்தன்
3. கணினியும் இணையமும் தமிழ் எழுத்துச் சூழலில் ஏற்படுத்திய மாற்றங்கள் - மு. மயூரன்
4. கணினி யுனிகோட் (Unicode) தமிழ்மொழியில் ஏற்படுத்திய தாக்கங்கள் - ஞா. பாலச்சந்திரன் (கணினி விரிவுரையாளர்)
ஆய்வுரைகளையடுத்து, ஐயந்தெளிதலுக்கும் தொகுப்புரைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் வழங்கும் வைபவம் இடம்பெற்றது. இறுதியாக மாவை நித்தியானந்தன் (அவுஸ்திரேலியா) இயக்கத்தில் உருவான 'பாப்பா பாரதி' என்ற என்ற சிறுவருக்கான ஒளிப்படம் லெ. முருகபூபதியால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
நன்றி. inneram.com
0 comments:
Post a Comment